Friday, October 9, 2020

Dead Poets Society (1989)


"கலை ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா " என்ற ஒற்றை வசனத்தை ஒரு படமே உணர்த்தி சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கான விடையை Dead poets society. இதனுடன் சேர்த்து மாணவர்கள் வாழ்வில் ஒரு ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கமும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் செய்யும் மரியாதையும் தான் படத்தின் பயணமாக அமைந்த திரைக்கதை.

டீன் ஏஜ் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புதிய ஆங்கில பேராசிரியராக வந்து சேர்கிறார் ஜான் கீட்டிங். பின் அவர்களுக்கு பாட புத்தகத்தை தாண்டி வாழ்க்கையின் அருமையை,கற்றல் தாண்டி கிடைக்க வேண்டிய அனுபவித்தை, வாழ்க்கையை புது விதத்தில் காணும் கண்ணோட்டத்தை என மாணவர்களுக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் கண்கள் நனைய வாழ்ந்து காட்டுவதே இப்படம். இது எதுவும் போதிக்காமல், documentary போல் அமைக்க படாமல் இருப்பதே இப்படத்தின் சிறப்பு

நாம் படிக்கும் கல்வி என்பது தொழிற்முறைக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஆன கருவியே, ஆனால் கலையோ காதலோ தான் நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் சாரம்சங்கள் என்பது படத்தில் வரும் வசனம். இதை கவிதை என்ற ஒரு கலையை முன் வைத்து கவிஞர்களுக்காக படத்தில் சொன்னாலும் உலகிலுள்ள ஏனைய கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

படத்தில் பேராசிரியராக நடித்த ராபின் வில்லியம்ஸ் என்ற மகத்தான கலைஞன் அவ்வளவு பரிவாக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் அப்படியே நிஜ பேராசிரியராக வாழ்ந்திருப்பார். கூடவே மாணவர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக துணையாக அமைந்திருக்கும்.

"Oh captain, My captain", carpe diem என படத்தின் வசனங்கள் படம் பார்த்து முடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையின் துணையோடு அமைந்த ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு.

மனதில் சலனங்கள் ஏற்படுத்தினாலும் ஒரு Positive vibe யும் புத்துணர்ச்சியையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் Feel good movie.

- Prem ❤

Saturday, October 3, 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே ;

பேய் படம் பார்த்தால் தான் நமக்கு பயம் வர வேண்டும் என்பதில்லை. ஆழ் மனதின் அமைதியை உருக்குலைத்து குற்ற உணர்ச்சியை கிளர்த்திவிடும் ஒரு காட்சியே போதும் அச்சம், கண்ணிர், மனச்சிதைவு என எல்லாவற்றையும் உள்ளுக்குள் இருந்து எடுத்து பிரளயம் போல் வெடிக்க செய்து விடலாம். அப்படி அமைந்த காட்சியே மகாநதியில் கமல் தன் மகளை விபச்சார விடுதியில் இருந்து மீட்டு வரும் காட்சி. "மகாநதி" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு முதலில் அந்த காட்சியும், அதனால் ஏற்படும் சலனமும் வேதனையும் தான் நமக்குள் இருக்கும் மனிதத்தை துளிர்க்க செய்வதும், ஆண் என்ற அகந்தையை அசைத்து பார்ப்பதும்‌.

காணாமல் போன தன் மகள் கல்கத்தாவில் சோனாகச்சி என்ற ஏதோவொரு இடத்தில் இருக்கிறாள் என அறிந்து கமல் அங்கு செல்வதும் - நேரில் அந்த இடத்தை பார்த்து அதன் சூழ்நிலையை புரிந்தவுடன் மனதில் ஏற்படும் "பதற்றமும்" - உள்ளே சென்று தேடிய பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் அங்கு இல்லை என்று "ஆசுவாச" படுவதும் - சட்டென அடுத்த நொடி தன் மகளை பார்க்க கூடாத இடத்தில் பார்க்க கூடாத கோலத்தில் பார்த்தவுடன் ஏற்படும் "வலியும்" - அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் மகள் விலகி சென்றாலும் அவளை "தழுவதும்" - பின் சுதாரித்து கொண்டு அவளை தூக்கிக்கொண்டு "பதறி" வெளியே ஓடி வருவதும் - அங்கே அவர்களை பிடித்து வைத்து கொண்டு ப்ரோக்கர் பணம் கேட்கும்போது "குமுறுவதும்" - மற்ற விலைமாதர்கள் அனைவரும் காசு திரட்டி அவனுக்கு வழங்குவதை பார்த்து "நெகிழ்ச்சி" அடைவதும் - அவர்களுக்கு கூனி குறுகி நன்றி தெரிவிப்பது என இத்தனை உணர்வுகள் நிகழ்ந்தது கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொரு அண்ணன், தம்பி, அப்பா, மகன், கணவன்,தோழன் என அனைத்து ஆண்களுக்கும் தான்.

இவ்வளவு கனம் மிகுந்த இக்காட்சியில் மனசை ஆறுதல் படுத்துமாறு வரும் வசனம் - ஒரு விலைமாதர் அந்த பெண்ணை பார்த்து "சிரிடி. உன் தெய்வம் வந்திருக்கு , உன்னை கூட்டிட்டு போக" என்று சொல்வது தான்.

ஒருபுறம் மகள் பருவமடைந்த போது அவளை ஜெயில் கம்பி வழியாக ஆதங்கத்தோடு பார்த்த கிருஷ்ணசாமி அதே மகளை சோனாகச்சியில் ஆற்றாமையோடு பார்ப்பது என்று கமல் என்ற நடிகன் வித்தியாசம் காட்ட, மறுபுறம் பாவத்தை தொலைக்கும் கங்கை நதிக்கரையில் தன் செல்வத்தை கண்டுபிடிப்பதாக காட்சி அமைத்த திரைக்கதை ஆசிரியர் கமல் கவனிக்க பட வேண்டியவர். 

After all these Haunting moments, now Ilayaraja entered with his Harmonium music for consoling our souls & followed by Kamal in his voice singing எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்...

- Prem ❤