Monday, December 7, 2020

Dear Comrade

Dear Comrade  :

தமிழ் சினிமா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமாக தகவமைத்து கொள்ளும். ஒரே மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒரு புது இயக்குனர் தேவதூதன் போல் வந்து ஒரு விருட்சத்தை விதைத்து விட்டு ரசிகர்களின் ரசனையை உயரத்துவார். அப்படி 2012 ல் தமிழ் சினிமா வரலாற்றில் பல சென்டிமென்ட்களை உடைத்து தன் ஒவ்வோர் படைப்பில் வாயிலாக சமூகத்தை அக்கறையோடு அணுகும் கலகக்காரனே இயக்குனர் பா. ரஞ்சித். 

டைட்டில் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே "அட்டகத்தி" என்ற தலைப்பை வைத்து கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தி "யார் இவர்?" என்ற கேள்வியை உருவாக்கியது.

தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதியை தவறாக சித்தரித்து கொண்டிருந்த பல  இயக்குனர்களுக்கு மத்தியில் அதன் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்வியலையும் அவர்களை சூழ்ந்துள்ள அரசியலையும் "மெட்ராஸ்" என்ற பெயர் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அந்த இயக்குனர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சுடர் ஒளி.

"கபாலி" என்ற பெயரை வில்லனின் அடியாட்களாக வரும் துணை கதாபாத்திரங்களுக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் வைத்து கொண்டிருந்த மட்டுமே வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைத்து கதாநாயகனுக்கு அந்த பெயரை சூட்டி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

காலாவில் கருப்பு+நீலம்+சிவப்பு வண்ணங்கள், தான் தயாரித்த பரியேறும் பெருமாளில் சாதிய அரசியலின் கோர முகம் என தான் இயக்கும் தயாரிக்கும் படங்களில் சமூகநீதி பேசும் நிஜ போராளி.

மேலும் பொதுவெளியில் Casteless Collective, கூகை திரை நூலகம், வானம் கலை திருவிழா என தன்னை சமூக செயல்பாட்டாராகவும் தன் செயல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

அவர் எழுதிய வசனம் அவருக்கே என்றும் பொருந்தும் படியாக இருக்கிறது - "நான் கால் மேல கால் போட்டு உக்காரருது தான் உன் பிரச்சினைனா நான் கால் மேல் கால் போட்டு தான் உக்காருவேன்டா ஸ்டைலா கெத்தா".
- Prem ❤

Tuesday, December 1, 2020

Emotional அண்ணாமலை :


படத்தில் ஒரு காட்சியில்

குஷ்பு to ரஜினி : கள்ளம் கபடம் இல்லாம எப்போ பார்த்தாலும் குழந்தை மாதிரி சிரிச்சுகிட்டே இருப்பீங்களே, அந்த பழைய சிரிப்ப நான் மறுபடியும் பாக்கனும்ங்க.

ரஜினி: அந்த அண்ணாமலை செத்து பல வருஷம் ஆச்சு..

இந்த உரையாடலுக்கு முன்பாக ரஜினி தனது மகள் தன் எதிரியின் மகனை விரும்புகிறாள் என அறிந்து அவளுக்கு பொறுமையாக அறிவுரை கூறி, அவள் அதை கேட்காத பட்சத்தில் அவளை ஆக்ரோஷமாக அடித்து, தன் இயல்பில் இருந்து வெளியே வந்து ருத்ரதாண்டவம் நிகழ்த்தி தன் நிலையை மனைவியிடம் கூறிவிட்டு வெறுத்து போய் நிம்மதியை தேடி வெளியே போவார். ஒரு அமைதியான இடத்திற்கு சென்று தனிமையில் நின்று கொண்டு இருக்கும்போது அவ்வழியே மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லும் ஒருவன்,மனம் போன போக்கில் தன் நிம்மதியை பகிரும் வகையில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டு போவான். இதை பார்க்கும் ரஜினி சட்டென ஒரு கனம் மனது இளகி, தன் பழைய நினைவுகளை கிளறி நினைத்து பார்த்து ஒரு புன்னகையுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்து, காரின் கண்ணாடி வழியாக தன் முகத்தை பார்த்து feel செய்வார். அதாவது நிம்மதியான பால்கார அண்ணாமலைக்கும் நிம்மதியை இழந்த இந்த அண்ணாமலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வார். நம் எல்லோர் வாழ்விலும் இது போல் நினைத்து பார்க்க பல நல்ல பசுமையான நினைவுகளும் அதை நினைக்கும் சூழலும் அமைந்து கொண்டிருக்கும். நான் பார்த்த படங்களில் இதுவரை திரையில் இருக்கும் எந்த ஒரு நடிகனும் இப்படி Nostalgic உணர்வை படம் பார்ப்பவர்களுக்கும் இவ்வளவு நுணுக்கமாக கடத்தியதில்லை. இந்த காட்சி முடிந்தவுடன், வீட்டிற்கு வந்து தன் வாழ்வில் உள்ள முக்கிய பெண்களான அம்மா-மனைவி-மகள் முன்னிலையில் "ஒரு பெண் புறா கண்ணிரில் தள்ளாட" என்று பாசம்,வலி,இழப்பு,விரக்தியுடன் பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகள் அமைத்து கஷ்டப்பட்டு நடித்து தள்ளாமல், ரொம்ப casual ஆக பாடல் முழுவதும் தன் பழைய வாழ்க்கையின் நினைவுகளை எண்ணி பார்த்துக்கொண்டே வலம் வருவார். படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இந்த பத்து நிமிட காட்சியில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் முத்தாய்ப்பாக இருக்கும் இக்காட்சி.

அண்ணாமலை வெறும் மாஸ்படம் மட்டும் அல்ல, ரஜினி என்ற Greatest Performerக்கு நடிக்க தீனி போட்ட படம்.

- Prem ❤