Monday, June 14, 2021

பருத்திவீரன் (2007) :



ஒரு கிராமம் - அதற்குள் இருக்கும் பொட்டல் காடு,ஆலமரங்கள்,செம்மண் புழுதி,ஆட்டுக்குட்டிகள்,சிறுதெய்வ வழிபாடு,கிராமிய கலைகள்,பனைமரங்கள்,ஓலை குடிசைகள்,மாட்டு வண்டிகள்,கருமேகம்,சுட்டெரிக்கும் சூரியன்,மீசை வைத்த தலைப்பாக்கட்டுகள்,அலப்பறை செய்யும் இளவட்டங்கள்,அப்பாவி தாய்மார்கள்,அப்பத்தாக்கள்,கரிசல் நிலம்,திருவிழா,மக்களின் பேச்சுவழக்கு,அரிவாள்,சட்டம் என அந்த கிராமத்தில் நம்மையும் கூட சேர்த்து உலாவவிட்ட படம் என்றால் அது பருத்திவீரன் தான்.

இப்படிப்பட்ட கிராமத்து சூழலில் ஒரு உயிரோட்டமான காதல் - அதை சுற்றி பின்னப்பட்ட சாதி வெறி - அதனூடே நடக்கும் வெட்டு குத்து,கொலை,ரத்தம் என படம் பேசிய விஷயங்கள் ஏராளம்.

ஒரு பெண்ணின் மேல் ஆண் காதல் கொண்டு அவளின் பின்னால் சுற்றி வருவது,அவள் மேல் தீவிரமாக இருப்பது என்பது தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் முத்தழகு தன் அறியா பருவத்தில் முளைத்த காதலால் பருத்திவீரன் பின்னால் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது, அவனை தனதாக்கிக் கொள்ள வீரமும் மிடுக்குடனும் திரிவது, அவனுக்காக அப்பாவுடன் சவால் விடுவது என வித்தியாசமாக ஆக Characterization அமைக்கப்பட்டிருக்கும். அந்த துடிப்பும் வேகமும் நிறைந்த முத்தழகாக பிரியாமணி கம்பீரமாக நடித்திருப்பார்.

லந்து லவுட்டு செய்யும் சண்டியராகவும் தனக்குள் காதல் வந்தவுடன் ஆண்களுக்குள் இருக்கும் வெட்கத்தை வெளிப்படுத்தும் வெள்ளந்தி என பருத்திவீரனாக தன் அறிமுக படத்திலேயே கார்த்தி அசத்தியிருப்பார். உயிர் குலைய வைக்கும் அந்த கிளைமேக்ஸில் இருவரும் தாங்கள் அதுவரை இருந்த கதாபாத்திர கோட்பாட்டில் இருந்து விலகி வேறு ஒரு நடிப்பு தளத்தில் நடித்திருப்பார்கள்.

செவ்வாழை,கழுவன்,குட்டி சாக்கு,பொணந்தின்னி,டக்லஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தில் இவர்கள் கூடவே பயணித்திருப்பார்கள்‌.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது போல் யுவன் சங்கர் ராஜா மண் மணம் மாறாத நாட்டுப்புற இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்.

பாரதிராஜா 80's ,90‌'sகளில் இருந்த கிராமத்தை திரையில் காண்பித்தார். அதற்கு பிறகான தசாப்தத்தில் கிராமத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் அச்சு அசலாக காண்பித்த இயக்குனர் என்றால் அது அமீர் தான்.

Paruthiveeran - A Raw blood shedded love story set-up in village backdrop. 👏

- Prem ❤

No comments:

Post a Comment