Thursday, September 3, 2020

Ustad hotel (2012) Malayalam :


"வயிறு நிறையற மாதிரி யாரு வேணாலும் சமைக்கலாம். ஆனா சாப்பிடறவன் மனசும் நிறையனும்".

 - படத்தில் வரும் வசனம். இதுவே இப்படத்தின் அடிநாதம். கேரளாவும், அந்த மக்களின் உணவின் ரசனையும், சமைக்கும் விதமும்,கைப்பக்குவமும்,ஈகை குணமும்,கடலும்,அன்பும்,நட்பும் என படம் பேசும் பேசு பொருட்கள் ஏராளம். கூடவே தாத்தாவிற்கும் பேரனுக்குமான உன்னத உறவை மென்மையாக சொல்லியிருக்கிறார்கள் ஸ்கிரிப்ட் எழுதிய அஞ்சலி மேனனும் இயக்குனர் அன்வர் ரஷிதும்.

'உஸ்தாத்' என்றால் மாஸ்டர் என்று மலையாளத்தில் பொருள். அதற்கேற்ப ஒரு கடற்கறையோரம் இருக்கும் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் வயதான முதலாளிக்கு உணவின் பாலுள்ள பற்று,ஈடுபாடு,அக்கறை என உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள காதலை படம் கவித்துவமாக வெளிப்படுத்துகிறது. சமையல் கலையின் மேலுள்ள உணர்வை இவ்வளவு துல்லியமாக வேறு எந்த நடிகனாலும் வெளிப்படுத்த முடியாது. திலகன் என்ற சிறந்த நடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்து காட்டினார். இதுவே அவரின் கடைசி படம்.

பிடித்தது செய்ய முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் பகட்டான வாழ்க்கையை தூக்கி எறிந்து சொந்த நாட்டிற்கு வந்து மனதுக்கு பிடித்த Chef வேலை பார்த்து தன் தாத்தாவின் பாரம்பரியத்தை தொடரும் இளைஞன் துல்கர் சல்மான் தன் அப்பாவிற்கும் தாத்தாவுக்கும் இடையே உறவுகளின் மேன்மையை நிலை நிறுத்துகிறார். 

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பசியால் வாடும் மனிதர்களுக்கு உணவு வழங்குதலின் மேன்மையையும் தேவையையும் உணர்த்தும் விதமான காட்சிகளும் படத்தில் உண்டு. 

படம் முழுக்கவே உணவு தான் பிரதான அம்சமாய் சுழன்று கொண்டிருக்கிறது. பிரியாணி, சுலைமாணி(கட்டஞ்சாயா), அசைவங்கள் என பல்வேறு விதமான உணவுகள் பற்றியும் படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுகிறது. இதற்கேற்ப வசனங்களும், ஒளிப்பதிவும், இசையும் துணை நின்றிருக்கிறது‌.

படத்தில் வரும் மற்றொரு Heart touching உண்மையான வசனம் :

"பெரும்பாலும் மனித உயிர்கள் எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் அப்படி இல்லை. ஒருவரின் வயிறு நிரம்பி விட்டால், போதும் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்".

Ustad Hotel - பல உண்மைகளை பிரதிபலிக்கும் படைப்பு‌.

- Prem ❤

No comments:

Post a Comment